கேரளாவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக்கோரி தென்காசி மாவட்டம் பரவன்பற்றுகளம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "தென்காசியில் கேரளா-தமிழ்நாடு எல்லை சோதனைச்சாவடியானது புளியரை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புளியரை கிராமத்திற்கு அடுத்த தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பரவன்பற்றுகளம், ஸ்ரீ முலப்பேரி நீர் தேக்கம், எஸ் வளைவு, கோட்டைவாசல் என நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு 400 குடும்பங்கள் வசித்துவருகின்றன.
புளியரை பகுதியில் தமிழ்நாடு எல்லை சோதனைச்சாவடி அமைந்துள்ளதால் எங்கள் கிராமத்திற்கு கட்டட வேலைகளுக்கு கொண்டுசெல்லும் மணல், ஜல்லி, செங்கல், விவசாயப் பொருள்களான நெல், வாழை, வீட்டு உபயோகப் பொருள்கள் அரிசி, பருப்பு, சிறுதானியம் கொண்டுசெல்லும் வாகனங்கள் சரியான ஆவணங்கள் இருந்தும் உள்ளே நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், கேரளா எல்லைக்குள் நுழைந்த 500 மீட்டரில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பின்புதான் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. கேரளப் பகுதியிலிருந்து தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சிக் கழிவுகள், பனைமர நுங்கு கழிவுகள், அழுகிய முட்டைகள், அழுகிய வாழை இலைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள் என வீணான அனைத்துப் பொருள்களையும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் கொட்டிச் செல்கின்றனர்.