தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

'மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மிகவாதிகள் பேசிய பேச்சுகள் ஏற்க முடியாதவை. இஸ்லாமியர்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்ட்கள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று பேசி உள்ளார்கள். இதை ஆதீனம் பேச என்ன உரிமை இருக்கிறது?' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

By

Published : Jun 6, 2022, 5:33 PM IST

Updated : Jun 6, 2022, 7:55 PM IST

இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது - கே பாலகிருஷ்ணன் பேட்டி
இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது - கே பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கடலூரில் மணல் கொள்ளை அபரிவிதமாக நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட குழியில் தான் பெண்கள் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர். இதே போல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளையும் மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கவும் தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். இதே போல விழுப்புரத்தில் 3 குழந்தைகள் இறப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது.

தமிழ்நாட்டில் கஞ்சா, போதை வியாபாரம் அதிகரித்து உள்ளது. அதைத்தடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் போடப்பட்டுள்ள ஒப்பந்தப் பணிகளை ஒழித்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ். எஸ் பணிக்கு மாறும் ஆன்மிகவாதிகள்:மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மிகவாதிகள் பேசிய பேச்சுகள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்ட்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று பேசி உள்ளார்கள். இதை ஆதீனம் பேச என்ன உரிமை இருக்கிறது?

ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால், இஸ்லாமியர்களை தேச விரோதிகள் எனப் பேசுவது என்ன விதமான அரசியல்?. மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசினால், ஆன்மிகப்பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிடக்கூடாது. ஆதீன மடங்கள் என்ன அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளா?

எதையோ மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தினர் செயல்படுகிறார்கள். கோயில் சொத்துகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதற்கு தனி சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

கோயில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்குத் தான் சொந்தம். எங்கேயோ நடக்கும் ஓரிரு சம்பவங்களை வைத்துக் கொண்டு கோயில்களை மொத்தமாக ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தவறு. மூட்டைப் பூச்சி இருந்தால் அதற்கு மருந்து தெளிக்க வேண்டுமே தவிர, வீட்டையே கொளுத்துவது நியாயம் அல்ல.

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளது. பாஜக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இலங்கையின் நிலைமை தான் இந்தியாவுக்கும் ஏற்படும்" என கூறினார்.

இதையும் படிங்க:"சென்னை கமிஷனரின் பணியை செய்யவிடாமல் அரசியல் தலையீடு இருப்பதால், மாட்டிக்கொண்டு முழிக்கிறார்" - ஜெயக்குமார்

Last Updated : Jun 6, 2022, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details