விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் நான்கு நாள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் விசாரணையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோரி கருத்துக்களை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக தமிழீழ ஆதரவு அமைப்புகள், தமிழீழ விடுதலைதான் எங்கள் நோக்கம் என்றும் தடை உத்தரவு செல்லாது எனவும் வாதாடினார்கள்.
கியூ பிரிவு காவல்துறையினர், தமிழர் விடுதலை படை, தமிழீழ பாசறை உள்ளிட்ட பல அமைப்புகள் மீது குற்றச்சாட்டு வைத்தனர். அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. நாளை மறுநாளும் இந்த விசாரணை தொடரும் என்றார்.
மேலும், விடுதலைப் புலிகள் குறித்து ஒருசிலர் தவறாக பேசுவதால் தீர்ப்பாய விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. விசாரணையிலும் தடங்கல் வராது என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: ஈழம் குறித்து பேச வைகோவிற்கு மட்டுமே தகுதி உண்டு: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி