ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சிபுரிந்த குற்றத்திற்காகத் தொழுகையின்போது, சூழ்ச்சியால் மருதநாயகம் என்ற யூசுப்கானை கைது செய்து, மதுரையில் 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இன்று அவரது 255ஆவது நினைவுநாளாகும்.
மக்கள் விரும்பும் தனிப்பெரும் ஆட்சியாளனாக மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து அவ்வப்போது இங்கு நிகழ்ந்துவந்த கலவரங்களை ஒடுக்கியும் பல்லாண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்த மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் நிலங்களைக் கைப்பற்றி மீண்டும் அக்கோயில்களின் நிர்வாகத்திடமே ஒப்படைத்து மிகச்சிறந்த ஆட்சியை வழங்கியவர்தான் கான்சாகிபு என்ற கம்மாந்தோகான் என்ற மருதநாயகம்.
தற்போதைய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பனையூர்தான் மருதநாயகம் பிறந்த ஊர். இந்த ஊரில் வாழ்ந்த வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பின்னாளில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்துக்கு மதம் மாறினர். அதன் காரணமாக மருதநாயகம் யூசுப்கான் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே மிகக் கூர்மையான அறிவு நுட்பமும் போர்க்கலைகளில் வல்லவராகவும் திகழ்ந்ததால்தான் தஞ்சைக்குச் சென்று பிரதாப சிம்மன் படையிலும் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுப் படைகளில் இணைந்து தளபதியாகவும் உயர்ந்தார்.
பிரெஞ்சுப் படை ஆங்கிலேயருடன் இணைந்து நடத்திய பல்வேறு போர்களில் யூசுப்கான் வெற்றிகளைக் குவித்தார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறினார். இதனால் அவரை வீழ்த்துவதற்கு பல்வேறு யுக்திகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். இதற்கிடையே பிரெஞ்சுக்காரர்களோடு யூசுப்கானுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அப்படையிலிருந்து வெளியேறி ஆங்கிலேயர்களுடன் இணைந்துகொண்டார்.
பின் ஆங்கிலப்படையில் இணைந்து பல்வேறு போர்களில் தளபதியாகப் பணியாற்றினார். இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பூலித்தேவர், அழகுமுத்து ஆகியோரோடு சண்டையிட்டு அவர்களையும் வென்று காட்டுகிறார். இதன் காரணமாக ஆங்கிலப்படையில் யூசுப்கானின் புகழ் பரவத் தொடங்குகிறது. அதே காலகட்டத்தில் திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலியுடன் நடைபெற்ற போரிலும் வெற்றிபெற்று ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.
இந்த வெற்றியின் விளைவால்தான் தளபதி பதவியிலிருந்து அடுத்த பெரிய பொறுப்பான ஆளுநர் பதவி யூசுப்கானைத் தேடிவந்தது. திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு போர்களில் யூசுப்கான் படை வென்ற காரணத்தால் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆளுநராக ஆளும் பொறுப்பு 1759ஆம் ஆண்டு அவரைத் தேடிவந்தது.