மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி, தர்மராஜ், பட்டுத்துறை, அருள்வேல், கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாய் வழியாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது.
இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்படவில்லை, மற்றும் மாற்று வழி குறித்தும் பரிசீலிக்கப்படவில்லை, ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.