தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 12:20 AM IST

ETV Bharat / state

கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை செய்யக்கோரிய வழக்கு - ஒத்திவைப்பு!

மதுரை: கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளரை விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற கிளை
உயர்நீதிமன்ற கிளை

தென்காசியைச் சேர்ந்த ஜமுனாபாய் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது கணவர் அருண்குமார் மீன் விற்பனைத் தொழில் செய்து வந்தார். மே 21ஆம் தேதி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கணவர், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்களைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறினார்.

மறுநாள் காலை இருசக்கர வாகனத்தை வாங்கி வருவதற்காக, பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக நான் காவல் நிலையம் சென்றபோது, அரைநிர்வாண கோலத்தில் கணவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். காவல் துறையினர் தாக்கியதில் அவருக்கு காயங்கள் இருந்தன.

அவரை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், அதிக மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் 23ஆம் தேதி சுடுகாட்டுப் பகுதியில் எனது கணவர் விஷம் அருந்தியது தெரியவந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் எவ்விதப்பலனும் இன்றி கணவர் உயிரிழந்துவிட்டார். காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதன் காரணமாக, எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதனை மறைத்து குடிபோதையில் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, எனது கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்குத் தொடர்பாக ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details