மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், 'தை 1ஆம் தேதி, முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த வருடம் ஜனவரி 15-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
அவனியாபுரம், அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடைபெற்றது. ஆனால், 2023-ம் வருடம் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல், ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினர் மட்டும் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது போன்று, நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்துக் குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.