மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், "ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஊழலை அறவே நீக்கும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அரசு, பொது விவகாரங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும் அவற்றை முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் 2018ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்தது.
லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு மூன்றின்படி லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகிய ஏதேனும் ஒன்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவராகவோ இருக்க வேண்டும். அவர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும், இருவர் சட்டத்துறையில் சாராதவர்களாகவும் இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் எவ்விதமான அரசியல் கட்சிக்கும் தொடர்பு உள்ளவராக இருக்கக் கூடாது.