தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 13, 2020, 4:42 PM IST

ETV Bharat / state

மாநகராட்சிகளுக்கான தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் எப்போது நடத்தபடும் என்பது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் மூன்று வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம், Madurai HC
உயர் நீதிமன்றம், Madurai HC

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலை நடத்த விரும்பாத தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு தவறான தகவல்களை வழங்கிவருகிறது.

தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டிசம்பர் 9இல் ஊரக பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். ஆகவே, மாநகராட்சி, நகராட்சி பொறுப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, 15 நாட்களுக்குள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" என அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வரை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை. எனவே வாக்காளர் பட்டியல் வெளியிட்டால்தான் தேர்தல் அறிவிக்க முடியும் என கூறினார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், தொடர்ந்து இது போன்ற காரணங்களை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கின்றன என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தபடும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் மூன்று வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ஒரு மணி நேரம் இடைவிடாத முத்த மழை - அசத்திய காதல் ஜோடிகள்!

ABOUT THE AUTHOR

...view details