தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2020, 2:03 PM IST

ETV Bharat / state

'உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது' நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா, இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்குவதில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்தது.

இவற்றுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு அரசு, ஆளுநரின் இசைவுக்காக அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. எனவே, மருத்துவ இடங்களில் 7.5 சதவிகிதம் இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீடு தொடர்பான முடிவு, எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இந்தக் கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5 சதவிகிதம் இடங்களை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தனர்.

இம்மனு இன்று (அக்.16) மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர், ”மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநர் சட்ட மசோதா குறித்து ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது பரிசீலிக்குமாறு கூறலாம்" எனத் தெரிவித்தார்.

சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால், நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாது" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனைத் தெரிவிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், ”அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது.

நான்கு ஐந்து லட்சங்கள் செலவழித்து, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர். கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும் வேதனைகளும் அளவிட முடியாதது” எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார். தொடர்ந்து இதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா எனத் தாங்கள் எண்ணுவதாகவும், இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் கலந்தாய்வு, மருத்துவக் கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்புகளை எப்போது தமிழ்நாடு அரசு வெளியிடும் என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details