தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2020, 12:15 PM IST

Updated : Apr 17, 2020, 4:53 PM IST

ETV Bharat / state

ஜல்லிக்கட்டுக் காளைக்கு இறுதிச் சடங்கு: ஊரடங்கை மீறிய 7 பேர் கைது!

மதுரை: அலங்காநல்லூர் அருகே செல்லாயி அம்மன் கோயில் காளை மூலியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு
ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்திலிருந்த செல்லாயி அம்மன் கோயில் காளை மூலி கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து காளையின் உடல் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி கொண்டாட்டமாக அடக்கம் செய்தனர்.

இந்நிகழ்வை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பல ஷேர்கள் ஆனதில் காவல் துறையினரின் கண்ணில் சிக்கியுள்ளது. இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர் காளையின் இறுதிச்சடங்கு நடைபெற்ற கிராமத்திற்குச் சென்றனர்.

தீவிர விசாரணையில், அது நடந்தேறியது முடுவார்பட்டி கிராமம் என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பாலமேடு உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், சிறப்புப் பிரிவு தலைமைக் காவலர் மணிராஜ் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச்சடங்கு நடத்தி பொதுமக்களை அதிகளவில் ஒன்று திரட்டியதாக கிராமத்தின் முக்கிய பிரமுகர்களான மலைச்சாமி, வடிவேலு, ராஜ்குமார், பிரேம் குமார், கண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமேடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய மணிவண்ணன், ”இச்சம்பவம் குறித்து வியாழக்கிழமை தகவல் கிடைக்கப் பெற்றது. இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளோம்” என்றார்.

இந்தக் கிராமத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர், ”அந்தத் தேவை தற்போது ஏற்படவில்லை. ஏனெனில் இதுவரை அப்பகுதியில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இருப்பினும் இக்கிராமம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ஊரடங்கு விதிகள் மீறல்: திமுக எம்எல்ஏ கருணாநிதி மீது வழக்குப்பதிவு!

Last Updated : Apr 17, 2020, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details