தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தியின் அகிம்சை கொள்கைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை - பூட்டான் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே - ஜிக்மி தின்லே

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் அகிம்சை சந்தை நிகழ்ச்சியில் பூடான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே பங்கேற்றார்.

காந்தியின் அகிம்சை கொள்கைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை - பூட்டான் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே
காந்தியின் அகிம்சை கொள்கைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை - பூட்டான் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே

By

Published : Sep 26, 2022, 7:24 AM IST

மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் அகிம்சை சந்தையை பார்வையிட்ட ஜிக்மி தின்லே செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மதுரையில் நடைபெற்று வரும் அகிம்சை சந்தை நிகழ்வு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையினர் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இயற்கை வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலகம் முழுவதும் தவறான வாழ்வியல் நடைமுறையை கையாண்டு வருகிறோம்.

இயற்கை வளங்களை சீரழிப்பது, இயற்கையை தவறாக கையாள்வது போன்றவற்றால் இயற்கை சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தேவையற்றவைகளையும் நுகர்கிறோம். இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். கிராமப்புற வாழ்க்கையில், ஒருவருக்கு ஒருவர் தங்கள் உற்பத்திப்பொருள்களை பரிமாறிக்கொண்டு நட்புடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அகிம்சை சந்தையில் பார்க்கும் ஒவ்வொன்றும் அடிமட்டத்தில் இருந்து வந்த யோசனைகளே. காந்தி கூறிய இயற்கைப்பொருளியல், அகிம்சை கொள்கைகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருந்தக்கூடியவை. மேலும் காந்தியின் கொள்கைகள் எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. காந்தியின் கொள்கைகளை கொண்டு செல்வதில் இளைய தலைமுறை ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

இளைய தலைமுறையினர் தான் மாற்றத்துக்கான வித்துகளாக உள்ளனர். முந்தைய தலைமுறையினர் ஏராளமான தவறுகளை செய்து விட்டனர். ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினர் தவறுகளுக்கு எதிராக குரலெழுப்பி, எதிர்காலத்தை மீட்டெடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். காந்தியின் எண்ணங்கள் இந்தியாவில் மட்டுமின்றி பூடான் நாட்டின் மக்கள் சிந்தனையிலும், சித்தாந்தத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டான் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பூடான் நாட்டில் ஒவ்வொரு நாளும் போராட்டமாகத்தான் அமைகிறது. 10 ஆண்டுகளுக்கு 25 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கல்வி, பொருளாதாரம் போன்றவற்றிலும் பின்தங்கிய நிலை இருந்தது. தற்போது ஏழ்மை நிலையில் விடுபட்டு உயர்வை கண்டுள்ளோம். எழுத்தறிவு விகிதம் அதிக அளவு உயர்ந்துள்ளது. பூடான் நாடு 72 சதவீதம் காடுகள் சூழ்ந்தது. பூடானில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழலை அழிப்பதில்லை. தற்போது தெற்காசிய நாடுகளில் மூன்றாவது வளர்ந்த நாடாக பூடான் உள்ளது. குறைந்த அளவு கார்பன் வாயு வெளியிடுவதில் உலகத்துக்கு பூடான் முன்னோடி நாடாக திகழ்கிறது" என்றார்.

தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காந்தியின் கொள்கைகள் முன்னெப்போதையும் விட தற்போதுதான் அதிகம் தேவைப்படுகிறது. அகிம்சை சந்தை போன்ற நிகழ்வுகள் மூலம் காந்தியின் கொள்கைகளை இளைய தலைமுறையினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

காந்தியின் வழி அகிம்சை வழியாகும். காந்தி மக்கள் மத்தியில் அன்பு, நட்பு போன்றவற்றை மட்டுமே போதித்தார். வெறுப்புணர்வை காந்தி அடியோடு வெறுத்தார். ஆனால் தற்போது நாட்டை ஆள்பவர்களால் வெறுப்புணர்வு மட்டுமே ஊட்டப்பட்டு வருகிறது. காந்தியின் பெயரைக் கூறிக்கொள்பவர்கள் காந்தியின் கொள்கைகளை பின்பற்றவில்லை.

முன்பு மத்திய மாநில அரசுகளுக்கிடையே பிரச்னை ஏற்படும்போது அவற்றை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த இருதரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்மூலம் பிரச்னைகள் கருத்து வேறுபாடுகள் களையப்படும். ஆனால் இன்று ஒற்றுமையின்மைதான் போதிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு விதைக்கப்படுகிறது. காந்தியின் கொள்கைகளை விட்டு மத்திய அரசு விலகிச்செல்கிறது. காந்தியின் கொள்கைகளுக்கு நாம் மீண்டும் திரும்பாவிட்டால் நாடு மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும். காந்தியின் பெயரைக்கூறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை.

கடந்த 8 ஆண்டுகளாக ராகுல் காந்தி எங்கே என்று கேள்வி கேட்டவர்கள் இன்று அவரது நடைபயணத்தால் அச்சமடைந்துள்ளனர். ராகுல்காந்தி எங்கே என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மக்கள் ராகுல் காந்தியை தேடிச்செல்கின்றனர். எதிர்க்கட்சியினர் கூட ராகுல் காந்தியின் நடைபயணத்தை வரவேற்றுள்ளனர்.

தற்போதையச் சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியமான ஒன்று என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது" என்றார்.

இதையும் படிங்க:பளு தூக்கும் போட்டியில் தாய் தங்கப்பதக்கம், மகள் வெள்ளிப்பதக்கம்...

ABOUT THE AUTHOR

...view details