மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் அகிம்சை சந்தையை பார்வையிட்ட ஜிக்மி தின்லே செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மதுரையில் நடைபெற்று வரும் அகிம்சை சந்தை நிகழ்வு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையினர் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இயற்கை வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலகம் முழுவதும் தவறான வாழ்வியல் நடைமுறையை கையாண்டு வருகிறோம்.
இயற்கை வளங்களை சீரழிப்பது, இயற்கையை தவறாக கையாள்வது போன்றவற்றால் இயற்கை சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தேவையற்றவைகளையும் நுகர்கிறோம். இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். கிராமப்புற வாழ்க்கையில், ஒருவருக்கு ஒருவர் தங்கள் உற்பத்திப்பொருள்களை பரிமாறிக்கொண்டு நட்புடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது அகிம்சை சந்தையில் பார்க்கும் ஒவ்வொன்றும் அடிமட்டத்தில் இருந்து வந்த யோசனைகளே. காந்தி கூறிய இயற்கைப்பொருளியல், அகிம்சை கொள்கைகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருந்தக்கூடியவை. மேலும் காந்தியின் கொள்கைகள் எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. காந்தியின் கொள்கைகளை கொண்டு செல்வதில் இளைய தலைமுறை ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.
இளைய தலைமுறையினர் தான் மாற்றத்துக்கான வித்துகளாக உள்ளனர். முந்தைய தலைமுறையினர் ஏராளமான தவறுகளை செய்து விட்டனர். ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினர் தவறுகளுக்கு எதிராக குரலெழுப்பி, எதிர்காலத்தை மீட்டெடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். காந்தியின் எண்ணங்கள் இந்தியாவில் மட்டுமின்றி பூடான் நாட்டின் மக்கள் சிந்தனையிலும், சித்தாந்தத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூடான் நாட்டில் ஒவ்வொரு நாளும் போராட்டமாகத்தான் அமைகிறது. 10 ஆண்டுகளுக்கு 25 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கல்வி, பொருளாதாரம் போன்றவற்றிலும் பின்தங்கிய நிலை இருந்தது. தற்போது ஏழ்மை நிலையில் விடுபட்டு உயர்வை கண்டுள்ளோம். எழுத்தறிவு விகிதம் அதிக அளவு உயர்ந்துள்ளது. பூடான் நாடு 72 சதவீதம் காடுகள் சூழ்ந்தது. பூடானில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழலை அழிப்பதில்லை. தற்போது தெற்காசிய நாடுகளில் மூன்றாவது வளர்ந்த நாடாக பூடான் உள்ளது. குறைந்த அளவு கார்பன் வாயு வெளியிடுவதில் உலகத்துக்கு பூடான் முன்னோடி நாடாக திகழ்கிறது" என்றார்.
தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காந்தியின் கொள்கைகள் முன்னெப்போதையும் விட தற்போதுதான் அதிகம் தேவைப்படுகிறது. அகிம்சை சந்தை போன்ற நிகழ்வுகள் மூலம் காந்தியின் கொள்கைகளை இளைய தலைமுறையினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.