தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "நான் பிளஸ் 2 படிக்கும் போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். பிளஸ் 2 முடித்து நான் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் சேர்ந்தேன். டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு என்னை கட்டாயப்படுத்தி வருகிறார்.
அவருக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 8.8.2017இல் திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. ஆவணங்களுடன் ஆலய பங்கு தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி பங்கு தந்தையிடம் விசாரித்தபோது குறிப்பிட்ட நாளில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெறவில்லை என்றும், அதுபோன்ற சான்றிதழ் தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.