கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர் கவாய் ஆகியோர் அமர்வு, 2018ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்திற்கான உத்தரவை பின்வாங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எவிடன்ஸ் கதிர், நமது அரசியலைமைப்பு சட்டத்தில் தீண்டாமைக்கெதிரான பல கருத்துகள் இருந்தபோதிலும், இன்றும் பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. எனவே, இனி பட்டியலின மக்கள் புகார் அளித்தாலே முதல் தகவல் அறிக்கை பதியப்படலாம், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிமன்றம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
இருப்பினும், பட்டியலின மக்கள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் காவல்துறை இயக்குநர்களுடன் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் , தமிழ்நாட்டில் 23ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஏழு விழுக்காட்டினர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். மீதமுள்ள 93 விழுக்காட்டினர் மிகவும் எளிமையாக விடுதலை பெறுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.