மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் வன ஆர்வலராக உள்ளேன். 485 சதுர கிலோ மீட்டர் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கொண்டது விருதுநகர் மாவட்டம். இந்தப் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 152 யானைகள் இப்பகுதியில் உள்ளதாகக் கண்டறியப்பட்டது .
பெரும்பாலும் யானைகள் வன வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் சில கொடியவர்கள் தந்தம் போன்றவற்றுக்காக யானைகளைக் கொடூரமான முறையில் கொன்றுவருகின்றனர்.
2018ஆம் ஆண்டு மட்டும் 84 யானைகள் இறந்துள்ளதாகவும், இந்தாண்டில் இதுவரை 61 யானைகள் இறந்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளால், யானை என்ற இனமே அழியும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சாப்டூர் வனப்பகுதியில் ஒரு யானை கொடூரமான முறையில் கொன்று எரிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை மறைத்து அப்பகுதி வனத்துறையினர், காட்டுப் பகுதியிலேயே இறந்த யானையின் சடலத்தைப் புதைத்துள்ளனர்.