தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை அரசு மருத்துவமனையில் இஇசிபி சிகிச்சை நிறுத்தம் - நோயாளிகள் பரிதவிப்பு - மதுரையில் இஇசிபி சிகிச்சை நிறுத்தம் நோயாளிகள் பரிதவிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கான இஇசிபி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள் பரிதவித்துள்ளனர்.

நோயாளிகள் பேட்டி
நோயாளிகள் பேட்டி

By

Published : Feb 14, 2022, 7:23 PM IST

மதுரை: இருதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்ற காரணத்தால் மாரடைப்பு, இருதய செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒருவருக்கு ஏற்படும்போது மருத்துவர்கள் இருதய பாதிப்புக்கு ஏற்றவாறு மருந்து, மாத்திரைகள், ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டண்ட், பைபாஸ் சர்ஜரி செய்து நம்மைக் காப்பாற்றுகின்றனர்.

அதேசமயம் இருதயம் மிகவும் பலவீனமானவர்கள், இதயத்தசை செயலிழப்பு அதிகம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்கள் ஆகியோருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் செய்யக்கூடிய மூன்றாவது சிகிச்சை முறைதான் இஇசிபி (EECP - Enhanced External Counter Pulsation).

நோயாளிகள் பேட்டி

அங்கீகாரம் பெற்ற சிகிச்சை

இச்சிகிச்சை முறை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ஜப்பான், சீனா, கொரியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்தியாவிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை முறை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இஇசிபி சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வழங்கப்படும் இந்தச் சிகிச்சை, ஏழை நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதால் மிகப் பயனுள்ள ஒன்றாகும். இச்சிகிச்சையின் மூலம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இஇசிபி சிகிச்சை நிறுத்தம்

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து இச்சிகிச்சை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுவிட்டதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தச் சிகிச்சையை மீண்டும் செயல்படுத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகள் மனுக்களைக் கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் அவர்கள் கூறியதாவது, "இருதய பலகீனம் உள்ள நோயாளிகளுக்கு இஇசிபி சிகிச்சைமுறை வரப்பிரசாதமாகும். அதிகச் செலவு பிடிக்கும் இச்சிகிச்சையை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இதுவரை மேற்கொண்டுவந்தது. ஆனால் தற்போது என்ன காரணத்தினாலோ இதனை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இதனால் எங்களைப் போன்ற ஏழை நோயாளிகள் கடுமையாகப் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இஇசிபி சிகிச்சை முறையை மீண்டும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொண்டுவர வேண்டும்" என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தற்போது இந்தச் சிகிச்சைக்காக ஏறக்குறைய 18 நபர்கள் மதுரையிலும் 100-க்கும் மேற்பட்டோர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆகையால் உயிர்காக்கும் இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை உடனடியாகத் தலையிட்டு ஏழை நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆஜரான கிரிஜா வைத்தியநாதன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details