மதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, “டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் பயிர்க்கடன் இல்லை என்ற நிலையே இனி வராது. அதுபோல இந்த ஆண்டு விவசாய பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2562 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் வாங்கிய 85 விழுக்காடு விவசாயிகள், கடனை திரும்ப செலுத்தி உள்ளார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தினை நிறைவேற்றுகிறோம் என கூறிய ஸ்டாலின், வீட்டிலேயே காணொலி மூலம் பேசி பாதுகாப்பாக இருந்து விட்டார், களப்பணி ஆற்றிய எம்.எல்.ஏ. அன்பழகன் தான் மறைந்து விட்டார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்த விவகாரத்தை பாராட்ட வேண்டும். எதை எதிர்க்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார். ஏன் என்றால் அவருக்கு இருப்பது சொந்த மூளை அல்ல வாடகை மூளை அதனால்தான் அப்படி பேசுகிறார்.