மதுரை:மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைச்சாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டு போலீசார் ஆவணப்படுத்தினர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கைவிரல் ரேகை குறித்த நவீன மென்பொருளான National Automated Finger print Identification System - NAFIS காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருளின் மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்தபோது, ராமநாதபுரம் கடலாடி காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் சேவுகராஜ் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.