மதுரை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த தடைகளை நீக்கக்கோரி, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் சு.வெங்கடேசன் கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு, 'ரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில், தமிழ்நாட்டின் ரயில்வே வளர்ச்சித்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்தபோது தங்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பிரச்சனையை ரயில்வே அலுவலர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள். அதனை உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.
மதுரை - தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதைத் திட்டங்களும், மதுரை-போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகலப்பாதைத் திட்டங்களும் பேரளம்-காரைக்கால் புதிய பாதைத் திட்டமும் மார்ச் 2022-க்குள் முடிய வேண்டியவையாகும்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.