தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2022, 10:39 PM IST

ETV Bharat / state

அன்னவாசல் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலி தேவி, மதுரம், குமார், அனுஷியா, விஜய சாந்தி, தங்கராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 9 கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுகவினரே பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிற கட்சியினைச் சேர்ந்தவர்கள் கூறும் நபர்களைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யவேண்டுமென மிரட்டல்கள் வருகின்றன,

கவுன்சிலர்களுக்குத் தேவை பாதுகாப்பு

ஆகவே, அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். அன்னவாசல் காவல் ஆய்வாளர் எங்களைத் தொல்லை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பாதுகாப்புகோரிய மனு காவல்துறையினரைச் சென்றடையாத காரணத்தினாலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறதே? எனக் கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில், மின்னஞ்சல் வழியாகவும் மனு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதி, 9 கவுன்சிலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details