சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போதுவரை சிறையில் இருக்கிறேன். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறையினர் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. எனக்கு பிணை வழங்கும்பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன்.
நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.