திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " கொலை மிரட்டல் வழக்கில் எனது மகன் முத்து மனோ களக்காடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின் அவரை அங்கிருந்து திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.
ஏப்ரல் 22ஆம் தேதி என்மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்" எனவும் அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்மாறும் உத்தரவிட்டது. மேலும் இறந்த முத்து மனோவின் உடலை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.