தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் என் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து அவரைப் பற்றி விசாரித்தார்.
மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் எனது சகோதரி வீட்டிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இரண்டு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தனர். இதனால் அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ஆம் தேதி இரவு அவரை விடுவித்தனர்.
ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்டிருந்தார். ஆனால் வசதியில்லாத காரணத்தால் என் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் எனது மகன் துரையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர்.
அதற்கு அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை. அப்போதுதான் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்தன. தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தேன். அம்மனு மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.