பாஜக சார்பில் மதுரை தெப்பக்குளத்தில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக பெரிய அளவில் தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மோடி ஒருவர் குரல் கொடுத்தால் போதும்.
ஒவ்வொரு தெருக்களிலும் பாஜகவின் கொடி பறக்கிறது என்பதில் மாற்றமில்லை. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும் சரி யாரோடும் போட்டியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு என்பது கண்டனத்துக்குரியது. கமலுக்கு எதிராக நான் பேசவில்லை. இல்லத்தரசிகள் நாள்தோறும் அவர் தம் இல்லங்களில் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்பின் காரணமாக இந்தப் பணிகளை செய்கிறார்கள். ஊதியத்தை எதிர்பார்த்து அல்ல.