தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிடிஆர் வாகனத்தின் மீது காலணி வீசியதுதொடர்பான முன்ஜாமீன் கோரிய வழக்கு தள்ளிவைப்பு - BJP attack minister PTR

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கில் முன்ஜாமீன் கூறி மூன்று நபர்கள் தாக்கல் செய்த வழக்கை தீர்ப்புக்காக தள்ளிவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat பிடிஆர் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கு
Etv Bharat பிடிஆர் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கு

By

Published : Aug 18, 2022, 5:26 PM IST

மதுரை:நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கில் முன்ஜாமீன் கூறி மூன்று நபர்கள் தாக்கல் செய்த மனுவில், 'ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியினைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையம் வந்தது. ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்வேறு கட்சியைச்சார்ந்தவர்கள் மதுரை விமான நிலையம் வந்திருந்தனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரை வரவேற்கவும், ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அங்கு சென்று இருந்தோம்.

அப்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் வந்தபோது கூட்டத்திலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக பாஜக மதுரை மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் 2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு அன்றே ஜாமீனில் வெளிவந்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணிக்கம் நடராஜன் மற்றும் சுதாநாகுலு கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் பிணை பெற்று கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தச்செயலில் நாங்கள் ஈடுபடவில்லை. எங்கும் தலைமறைவு ஆகவும் இல்லை. இந்த வழக்கிற்குத்தேவையான பிணையம் வழங்கத் தயாராக உள்ளோம். எனவே, எங்களது 3 நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பில், "போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரர்களின் உரிமை விளம்பர நோக்கில் ஆனதாக உள்ளது. முன் ஜாமீன் கோரிய மூவர் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும் அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்திய நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும், நிகழ்வில் நடந்த இந்த சம்பவத்தை அரசு சட்ட விரோதமானதாக, ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகவே பார்க்கிறது. ஆகவே மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ''இது திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. எதிர்பாராதவிதமாகவே நடந்தது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை தீர்ப்பிற்காக ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:வாங்க...வாங்க...சசிகலா, டிடிவி.தினகரன், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு...

ABOUT THE AUTHOR

...view details