சில ஆண்டுகளாகவே, உலகின் வெப்பநிலை வினாடிக்கு வினாடி அதிகரித்துவருவதாக பருவநிலை நிபுணர்கள் கூறிவருகின்றனர். இம்மாற்றத்திற்கு மனிதனின் செயல்பாடுகளும் முக்கிய காரணியாக அமைகிறதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூழலின் தன்மையை உணராமல், நாகரிக மாற்றத்தின் பெயரில் தன் சூழலையும், இயற்கையையும், நடைமுறை யதார்த்தங்களையும் மனிதன் மாற்றிக்கொண்டே வருகிறான். நடைமுறை சூழலுக்கேற்ப மனிதன் தன்னை உருமாற்றிக்கொள்வதாகக் கூறினாலும், இயற்கை கட்டமைப்பையும் தன்னோடு சேர்த்து உருமாற்றம் செய்கிறான் என்பதை ஏனோ அவன் அறிவதேயில்லை.
இப்பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், இயற்கைச் சூழலின் தட்பவெப்ப நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும். ஆனால், மனிதன் உலகமயமாக்கல் கொள்கையில் தன்னை மறந்தபோது தகவமைத்தல் என்பது தாவுதலாகிவிட்டது.
தனது சூழலுக்கு ஒவ்வாத பலவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதே பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளில் முக்கியமான ஒன்று. ஒரு படைப்பு மற்றொரு படைப்பை அழித்துவிட்டே இந்த உலகை எட்டிப்பார்க்கிறது. அப்படி அழிக்கப்படும் படைப்புகள் பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தவையாக இருப்பது வேதனையான ஒன்று.
உலகமயமாக்கல் வரலாம், தொழில் மயமாக்கல் வரலாம், ஏன் மனித வேலைப்பளுவை குறைக்கும் இயந்திர மயமாக்கலும் வரலாம். இதனை மனிதர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கான பொருளாகக் கூட கருதலாம். ஆனால், அவையனைத்தும் இயற்கையை சிதைக்காமல் இருக்கும்வரை மட்டுமே.
மேற்கூறிய வளர்ச்சிகள் அனைத்தும் நமது நாட்டில் இயற்கை வனப்புகளை அழித்தே நடத்தப்படுகின்றன. வளர்ச்சிகள் நம் நாட்டில் வனங்களை சுருக்கிவிட்டன. அதில் கட்டப்படும் கட்டடங்களிலும், சூழலினை சமன்படுத்த மரங்கள் இல்லாமல் குரோட்டான்களாகவே குடியேறுகின்றன. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்ப ஏதுவான மரங்கள் நடப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது, தன்னார்வலர்களின் முயற்சியில் மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் மக்களின் மத்தியில் பிரசித்திப் பெற்றிருந்தாலும், இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலும் எங்கோவொரு மரம் கட்டுமான பணிகளுக்காகவும், சாலை விரிவாக்கத்திற்காகவும், மனிதனின் லாபத்திற்காகவும் வெட்டப்பட்டிருக்கலாம்.
இந்த நவீன காலத்தில் ஒரு பொருளின் அத்தியாவசியத்தைவிட, அப்பொருளுக்கான அடையாளமோ, சந்தைப்படுத்தப்படுதலோ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அப்படியிருப்பின், இந்தியா தனது தேசிய மரமாக ஆலமரத்தினை அங்கீகரித்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் வனங்களையும், அவற்றை சார்ந்த உயிரிகளையும் காப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உள்ளதா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் மழைப்பொழிவை ஊக்குவிக்கும் மரங்களில் முக்கியமானது ஆலமரம். இது, இலைகளின் மூலம் அதிகப்படியான நீராவியாதலை நிகழ்த்தி மழைப்பொழிவை அதிகரிக்கிறது.