தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 20, 2020, 7:41 PM IST

ETV Bharat / state

விசாரணைக் கைதியை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பிணை

மதுரை: விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் கைதியை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
விசாரணைக் கைதியை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் கடந்த 2014ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சார்பு - ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் செய்யது முகம்மது (24) என்ற மோட்டார் சைக்கிள் மெக்கானிக் மீது ஒருவர் திருட்டு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க எஸ்.பி.பட்டினம் போலீசார் 14.10.2014-இல் செய்யது முகம்மதுவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரணை அதிகாரியான நான் விசாரணை நடத்தியபோது, செய்யது முகம்மது அருகே கிடந்த கத்தியால் என்னை கொலை செய்யும் நோக்கோடு தாக்க வந்தார். நான், என்னை தற்காத்துக் கொள்வதற்காக என்னிடம், இருந்த துப்பாக்கியால் சுட்டேன். இதில் செய்யது முகம்மதுவின் இடது மார்பில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் 16.10.2014-இல் உத்தரவிட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, என் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில், விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக எனக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ரூ.2 லட்சம் அபராதத் தொகையை என்னிடம் வசூலித்து, செய்யது முகம்மதுவின் தாய் செய்யதலி பாத்திமாவிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பணியில் இருந்த என் மீது கொலை செய்யும் நோக்கோடு செய்யது முகம்மது கத்தியால் தாக்க வந்ததால்தான் நான் சுட நேரிட்டது. மேலும், என் மீது வேறு எந்தவித புகார்களும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் எஸ்.ஐ. காளிதாஸின் தண்டனையை நிறுத்திவைத்து நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருச்சியில் தங்கி, நீதித்துறை நடுவர் முன்பு தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details