தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2020, 9:04 PM IST

ETV Bharat / state

விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள அறிவுறுத்தல்

மதுரை: விளையாட்டு வீரர்கள், நடிகர்களை பல லட்சம் இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து, பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுவரை 13 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த விளையாட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தடையில்லாமல் இந்த விளையாட்டு நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த விளையாட்டிற்குப் பிரபலமான நடிகர்களையும், வீரர்களையும் பயன்படுத்துகின்றனர்.

எனவே அனைத்துவிதமான ஆன்லைன் விளையாட்டுகள், ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்றம் விளையாட்டு வீரர் கங்குலி, நடிகை தமன்னா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிசிசிஐ தலைவர் கங்குலி சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜாராகி, இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல்செய்ய கால அவகாசம் கோரினார்

அப்போது நீதிபதிகள், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்காக விளம்பரம் செய்யும் பிரபலங்களை பல லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களையே எதிர்காலமாக கருதுகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சூதாட்டங்களில் இவர்கள் விளம்பரத்திற்காக நடித்துவருகின்றனர்.

இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டால் இதுவரை 13 நபர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஆகவே பிரபலமானவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, வழக்கில் பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரியதால், கால அவகாசமளித்து இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவனை நியமனம் செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details