மதுரை: தமிழ்நாட்டின் ’முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடம்' ஆக அறிவிக்கப்பட்டுள்ள 'அரிட்டாபட்டி கிராமம்', பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட இக்கிராமத்தின் உயிர்க்கோளமான 'மலை'யைப் பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் மக்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியே தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு. இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.
அரிட்டாபட்டியும் அதன் தனிச்சிறப்பும்:மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் தான், அரிட்டாபட்டி. தற்போதுள்ள அரிட்டாபட்டி என்ற பெயர், சமண சமயத்தின் 22ஆவது தீர்த்தங்கரரான 'நேமிநாதர்' என்ற அரிட்டநேமியின் பெயரால் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அரிட்டாபட்டியாக மருவியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இங்குள்ள மலைக்கு மேற்புறம் அமைந்த கி.பி.9ஆம் நூற்றாண்டுக் 'குடைவரைக் கோயில்' இருப்பது தனிச்சிறப்பு மிக்கது. சிவபெருமான் லிங்க வடிவத்தில் அமைந்துள்ள கருவறையுடன், பாசுவமதத்தைத் தோற்றுவித்த லகுலீசரின் சிற்பம் அக்குகைக்கோயிலின் இடதுபுறம் அமைந்துள்ளது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பாகும்.
கி.மு முதல் நூற்றாண்டு 'தமிழி' கல்வெட்டு:இங்குள்ள மலைத்தொடர் 'கழிஞ்சமலை' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் பழமையான பெயர் 'திருப்பிணையன் மலை' என்பதாகும். இந்த மலையின் வடக்குப்புறம் அமைந்துள்ள இயற்கையான குகைத்தலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டைச்சேர்ந்த 'தமிழி' கல்வெட்டு உள்ளது. அதில், 'நெல்வேலி செழியன் அதினன் வெளியன்' என்பவன் இங்குள்ள படுக்கைகளைச் செய்து கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியக்கவைக்கும் குடைவரை கோயில் சிற்பம்:அக்குகைத்தலத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே, அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் சமண (ஜைனர்) தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அச்சணந்தி என்ற முனிவர் இதனைச் செய்வித்துள்ளார். திருப்பிணையன்மலையிலுள்ள பொற்கோட்டு கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இந்தத் திருமேனிக்கு பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதன் கீழுள்ள தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இச்சிற்பத்திற்கு அக்காலத்திலேயே, வண்ணம் தீட்டியுள்ளனர். அதன் எச்சங்கள் இப்போதும் காணப்படுகின்றன.
நீர்வளமும் அதன் செழுமையும்:அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளரும், அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிரிய பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் கூறுகையில், 'தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய இடமாக அரிட்டாபட்டியை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றி. சேர்ந்தாற்போன்று அமைந்த நீர்நிலையும் மலையும் பல்லுயிர்ச்சூழலுக்கு ஏதுவாக உள்ளன. இதனால் மரம், செடி, கொடி மட்டுமன்றி, அவற்றைச் சார்ந்து பறவைகள் விலங்குகளும் செழிப்பாக உள்ளன. ஊரின் பசுமைப்போர்வைக்கு இந்த உயிரினங்களே ஆதாரம்.
மனிதர்களின் வாழ்வியலுக்கு, பல்லுயிர்களே முதன்மையான ஆதாரமாகத் திகழ்கின்றன. எங்களது அரிட்டாபட்டி மக்களின் தற்சார்பு வாழ்வியலை உறுதி செய்வதற்காகவே, இயற்கையான இந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரிதும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவையனைத்தையும் ஆவணப்படுத்த பெரிதும் முயற்சி மேற்கொண்டோம். அப்போதுதான், அரிட்டாபட்டியின் உண்மையான பரிமாணத்தை எங்களால் உணர முடிந்தது. இங்கு இயல்பாகவே நிலவும் உயிரினச் சங்கிலியைப் பாதுகாக்க அரிட்டாபட்டி பொதுமக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரியவகை 'லகடு வல்லூறு' கழுகினம்:அழியக்கூடிய தருவாயில் உள்ள உயிரினங்களை 'என்டேஞ்சர்டு ஸ்பீஸிஸ்' (Endangered Species) என அறிவித்து அவற்றைப் பாதுகாக்க இந்திய அரசு சட்டங்களையும் இயற்றியுள்ளது. அதுபோன்ற அழியும் தருவாயில் உள்ள 'லகடு வல்லூறு (லகார் ஃபால்கன்-laggar falcon)' என்ற கழுகினம் இங்குள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக அரிட்டாபட்டியில் மட்டுமே காணப்படுவதாக பறவையியலாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கையைக் காத்த கிராமத்தினருக்கு கிடைத்த வெகுமதி:இவையனைத்துமே முறைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. துறை சார்ந்த அரசு அலுவலர்களும், இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அவர்களே நேரடியாக இங்கு வந்து ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அதேபோன்று, அண்மையில் பிஹெச்எஸ் அமைப்பின் செயலாளரும் ஆய்வு செய்தார். இதனையடுத்தே, தமிழ்நாடு அரசு அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் அரிட்டாபட்டி மக்கள் சார்பாக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.