தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் திட்டத்தில் இறந்தவர் பெயரில் வீடு ஒதுக்கீடு; அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயுமா?

By

Published : Feb 17, 2023, 9:09 PM IST

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் இறந்தவர் பெயரில் வீடு கட்டுவதற்கு ரூ.2.40 லட்சம் ஒதுக்கீடு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்யக் கோரிய வழக்கை உத்தரவிற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் இறந்தவர் பெயரில் வீடு ஒதுக்கீடு
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் இறந்தவர் பெயரில் வீடு ஒதுக்கீடு

மதுரை: திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் ID (i) TN-1645120 பெரியண்ணன் நீலகண்டன் மற்றும் (ii) TN-565971 தங்கப் பொண்ணு பெரியண்ணன் ஆகியோர் PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீட்டைப் பெற்றனர்.

ஆனால், இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை ஒன்றிய அதிகாரிகள் கடைபிடிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் இருவருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயனாளி பெரியண்ணன் நீலகண்டன் வீட்டை கட்டி அவருடைய வங்கி கணக்கில் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரியண்ணனின் அதே வீட்டின் புகைப்படத்தை, தங்கபொண்ணு பெரியண்ணன் என்ற மற்றொரு பயனாளியின் ஐடி-க்கு அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். அந்த வீட்டின் முழு நிதியையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் பயனாளி தங்கப்பொண்ணு பெரியண்ணன் 16.10.2020 அன்று இறந்துவிட்டார், அதேசமயம் யூனியன் அலுவலக அதிகாரிகள் போலியான கட்டைவிரல் அடையாளத்துடன் அவருடைய ஒப்புதலை உருவாக்கி இறந்தவர் ஜூலை, 2022-ல் யூனியன் அலுவலகத்திற்கு நேரில் வந்ததாக பதிவுகளில் காட்டியுள்ளனர்.

எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மேற்பார்வையாளர் வெங்கடேஷ் குமார், தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் கிளின்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கி.ஊ) சரவணக்குமார் மற்றும் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (திட்டம்), சிவக்குமார் மற்றும் லோகநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ் மற்றும் காளிதாஸ், இளநிலை பொறியாளர்கள் அரங்கநாதன் மற்றும் பரணிதரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், முறைகேடு செய்யப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் கிளிண்டன் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வெங்கடேஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கி.ஊ) சரவணக்குமார் மற்றும் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (திட்டம்), சிவக்குமார் மற்றும் லோகநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ் மற்றும் காளிதாஸ், இளநிலை பொறியாளர்கள் அரங்கநாதன் மற்றும் பரணிதரர் ஆகியோர் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், முறைகேடில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ஏன் நடைபெறவில்லை என கேள்வி எழுப்பி வழக்கினை உத்தரவிற்காக பிப்ரவரி 22ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: திருடச் சென்ற வீட்டில் பெண்ணிடம் சில்மிஷம்; திருடன் கைது

ABOUT THE AUTHOR

...view details