தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது! என்ன காரணம் தெரியுமா? - vaigai dam

வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் மற்றும் 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொட்டும் மழையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார்
கொட்டும் மழையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 9:25 PM IST

கொட்டும் மழையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார்

மதுரை:வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் மற்றும் 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ. 27) போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கும்போது, திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15 முதல் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கு 45 ஆயிரம் ஏக்கரும், மேலூர் ஒரு போக பாசனத்திற்கு 85 ஆயிரம் ஏக்கரும், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கு 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் திறக்க, மூன்று பகுதியில் இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் மற்றும் 58 கிராம பாசன கால்வாய்க்கு உடனடியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு இன்று (நவ. 27) 30க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழை பெய்த போதும் போராட்டத்தை கைவிடாமல், கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட முறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும், ஆளும் திமுக அரசு தண்ணீரில் அரசியல் செய்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அனுமதியை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சேலம் செயில் நிறுவன நிலப்பிரச்சினை.. சுமூக தீர்வு காண பாட்டாளி தொழிற்சங்கம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details