மதுரை மாநகரின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மேலவெளி வீதியில், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து ஒழுங்கு காரணமாக இப்பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்டர் மீடியன் என்றழைக்கப்படும் இந்தச் சாலை தடுப்பின் மீது போதையில் இருந்த குடிமகன் ஒருவர் ஏறி யோகாசனம் செய்வதைப் போன்று கை கால்களை நீட்டி சாவகாசமாக படுத்து உறங்கினார். இரு வழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே உயிருக்கு ஆபத்தான வகையிலும், தூக்கத்தில் புரண்டு சாலையில் விழும் நிலையிலும் இருந்த நபர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே யோகாசனம் செய்வதுபோல் படுத்திருந்தார்.
இந்நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை திலகர் திடல் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அந்த நபரை எழுப்பினர். உடனே விழித்துக்கொண்ட குடிமகன், தன்னை எழுப்பிய காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.