தமிழ்நாடு

tamil nadu

ரயிலில் திகில் பயணம் செய்த பயணி: சாதுர்யமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்

By

Published : Nov 21, 2022, 6:45 PM IST

பூட்டப்பட்ட ரயில் பெட்டியில் ஆபத்தான முறையில் ஏறி பயணித்த பயணியை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் பாராட்டுத் தெரிவித்தார்

ரயிலில் திகில் பயணம் மேற்கொண்ட பயணி
ரயிலில் திகில் பயணம் மேற்கொண்ட பயணி

மதுரை:திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமைதோறும் கொங்கண் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. நவம்பர் 2ஆம் தேதியன்று இயக்கப்பட்ட தாதர் விரைவு ரயிலின் பின்புறம் பராமரிப்பிற்கு அனுப்புவதற்காக, இரண்டு காலி ரயில் பெட்டிகள் பூட்டப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டன.

இந்த ரயிலில் எஸ் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய சரவண அருணாச்சலம் என்ற பயணி ரயில் புறப்படும்போது, கடைசி நேரத்தில் திருநெல்வேலி ரயில் நிலைய நடைமேடைக்கு வந்துள்ளார். ரயில் புறப்பட்டுச் செல்வதைக் கண்டு ஓடும் ரயிலில் கடைசியில் உள்ள பூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் தாவி ஏறி ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

இதனை திருநெல்வேலி வடபகுதி நடைமேடை இறுதிப்பகுதியில் ரயில் பெட்டி பராமரிப்புப் பணியாளர்கள் ஞானசேகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பார்த்துள்ளனர்.

சாதுர்யமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள்

இந்த ரயிலின் அடுத்த நிறுத்தம் கோவில்பட்டி என்பதால் 65 கி.மீ., தூரத்திற்கு படியில் தொங்கிக்கொண்டு பயணித்தால் ஆபத்தில் முடியும் என உணர்ந்து உடனடியாக நிலைய அதிகாரிக்கும், அதே ரயிலில் ஆய்வு மேற்கொண்டிருந்த தங்களது மேற்பார்வையாளர் பாலமுருகனுக்கும் தெரிவித்தனர்.

பாலமுருகன் உடனடியாக ரயில் பைலட் மற்றும் மேலாளருக்கு நிலைமையைத் தெரிவித்து ரயிலை நிறுத்த கூறினார். அதற்குள் ரயில் 14 கி.மீ., தூரம் கடந்து கங்கைகொண்டான் ரயில் நிலையத்துக்குச் சென்றுவிட்டது. கங்கைகொண்டான் கடந்தவுடன் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அந்தப் பயணியை இறக்கி, அறிவுரை கூறி எஸ் 2 பெட்டியில் பயணத்தைத் தொடர அனுமதித்தனர். சாதுர்யமாக செயல்பட்டு பயணியைக் காப்பாற்றிய ரயில் பெட்டி பராமரிப்பு மேற்பார்வையாளர் எஸ். பாலமுருகன், ஊழியர்கள் பி. ஞானசேகரன், ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு மதுரை ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.

சாதுர்யமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள்

உடனிருந்த கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் மமேஷ் கட்கரி, உள்ளிட்டோர் ஊழியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details