தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் - கதிர் ஆனந்த்

மதுரை: கனிமொழி மற்றும் கதிர்ஆனந்த் ஆகிய இருவரையும் தகுதியிழப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம்

By

Published : Apr 12, 2019, 5:16 PM IST

ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த வி.அப்துல்லா சேட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக்குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.

அவருக்காக கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பரப்புரைக் கூட்டங்களில் வாக்காளர்களுக்கு நூதன முறையில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். மார்ச் 27ஆம் தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக கதிர்ஆனந்த் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகள் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ள என்னைப் போன்றவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கச் செய்துள்ளது.

இதனால் கனிமொழி மற்றும் கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 5ஆம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details