மதுரை மீனாட்சி நகர்ப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தங்கப்பாண்டி (69), நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வில்லாபுரம் பத்மா திரையரங்கு எதிரே உள்ள கற்பக நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்துள்ளது.
தொடர்ந்து, தங்கப்பாண்டியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல் துறையினர், உயிரிழந்த தங்கப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.