மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கள ஆய்வில் ஈடுபட்டபோது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் பாறை இடுக்குகளில் இருப்பதை கண்டறிந்தார். அதனைத்தொடர்ந்து வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் செல்லபாண்டியன், முனைவர் முனீஸ்வரன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு கற்படுக்கைகளை ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது, "மதுரையில் கிமு 3 லிருந்து கிபி.3ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளது. மதுரையை சுற்றிலும் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலை கீழக்குயில்குடி, மாங்குளம் உள்ளிட்ட எண்பெருங்குன்றங்களில் சமணம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன.
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் புதிய கற்படுக்கைகள் கிடைத்துள்ளன. மற்ற படுக்கைகளைப் போல இவையும் கி மு.2 மற்றும் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். ஏற்கனவே உள்ள கற்படுக்கைகளில் கிமு 2 மற்றும் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.