மதுரை: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது. இந்த கோயில் திருவிழாவின் போது ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக்கொண்டிருந்ததாகவும், இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கூறியதாகத் தெரிகிறது.
பின்னர், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றி இருதரப்பு மோதலாக மாறிய நிலையில், அந்தப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், நொண்டிகோயில் தெரு பகுதிக்குள் புகுந்த சிலர் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், வீட்டிற்குள் இருந்த நபர்களையும் அடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று கலவரத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த இரு தரப்பு மோதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 பைக்குகள் 1 கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அதே பகுதியை சேர்ந்த மணிமுத்து, செந்தில்குமார், முத்துக்குமார், பழனிக்குமார் ஆகிய 4 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருதரப்பு மோதலால் திருமோகூர் பகுதியில் பதட்டமான சூழல் உருவானதை அடுத்து, அந்த பகுதி முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பைக்குகள் கார் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒத்தக்கடை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.