தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2020, 1:49 PM IST

Updated : Jul 10, 2020, 2:42 PM IST

ETV Bharat / state

காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!

கிருஷ்ணகிரி: அரசு மதுபானக்கடையில் மதுப்பாட்டில்களை கொள்ளையடித்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அஞ்செட்டியில் 3050 என்ற எண் கொண்ட அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மேற்பார்வையாளராக தருமபுரி மாவட்டம், பொங்கவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 24ஆம் தேதி இவர் வழக்கம் போல, அரசு மதுபானக் கடையைத் திறக்க சென்றபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, மதுப்பாட்டில்கள் திருடு போய் இருந்தன.

இதுகுறித்து அஞ்செட்டி காவல் துறையினருக்கு தகவலளித்த அவர் காவல் துறையினரின் உதவியுடன் மதுப்பாட்டில்களை எண்ணி பார்த்துள்ளார். அப்போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள 16 பெட்டி, மதுப்பாட்டில்கள் திருடு போனது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அரசு மதுபானக் கடையில் திருடிய 16 பெட்டி, மதுப்பாட்டில்களில் 3 பெட்டி மதுப்பாட்டில்களை வயிறு நிரம்ப குடித்த அடையாளம் தெரியாத நபர்கள், மீதமிருந்த 13 பெட்டி மதுப்பாட்டில்களையும் ஜூலை 8ஆம் தேதியன்று காலை அரசு மதுபானக் கடை வாசல் அருகே வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் சென்றவர்கள் அஞ்செட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்த மதுப் பாட்டில்கள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை 9) அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சிலரை, சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதில் ஸ்ரீராம் என்பவர் அவமானம் தாங்க முடியாமல், காவல் நிலையத்திலிருந்த கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : Jul 10, 2020, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details