கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல் குவாரிகளை எதிர்த்து கிராம மக்கள் போராடி வரும் நிலையில் கடந்த 8 மாதங்களாக குவாரிகள் செயல்படாத நிலையில் 2 கல் குவாரிகள் செயல்படவும், சாலையினை மறிக்கக் கூடாது எனவும் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று கல்குவாரி கனரக லாரிகள் கொரட்டகிரி கிராமத்திற்குள் வந்தது. இந்நிலையில் வாகனங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 4 தாலூகாவைச் சேர்ந்த 60 கல்குவாரிகள், 100க்கும் மேற்பட்ட கிரஷர்களின் உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 20,000 பேர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிரும்புவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.