தமிழ்நாடு, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர். அதில் வாகனத்தில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த சிராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், திருமலை நகர் என்ற பகுதியில் உள்ள குடோனுக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்தக் குடோனிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.