கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று காலை அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பாஜக தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது 2 கோடி அதிமுக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகு, ஊடகங்களில், அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், தவறான கருத்துகளை தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல. எனவே, ஊடகங்களில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தோ்தல்கள் என இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்பது நாடகம் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது, திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.