கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைக் கூட்டம் தஞ்சமடைந்தது. அதிலிருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குச் சென்று அட்டகாசம் செய்து வந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த வனக் காவலர்கள் மயக்க ஊசி செலுத்தி, குட்டி யானையை மீட்டு, அதன் தாயுடன் சேர்த்தனர்.
இந்நிலையில், அதே குட்டி யானை மீண்டும் தாயிடமிருந்து பிரிந்து தனியாக வனப்பகுதிக்குள் வந்தது. பின்னர், உணவு தேடி இன்று அதிகாலை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியில் சுற்றித்திரிந்ததைக் கண்ட கிராம மக்கள், குட்டி யானையை விரட்ட பட்டாசுகள் வெடித்தனர்.