கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பசுமைக் குடில்கள் மூலம் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குடைமிளகாய் ரெட், மஞ்சள், பச்சை ஆகிய மூன்று நிறங்களில் சாகுபடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் குடைமிளகாய் சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற வெளி மாநில நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அறுவடைக்குத் தயாரான குடைமிளகாயை கரோனா தொற்று பாதிப்பால் எங்குமே அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுள்ளது. மேலும், 75 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாரான குடைமிளகாய்களை விவசாயிகள் அறுவடை செய்து சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.