கிருஷ்ணகிரி:வேலூரிலிருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றுக்கொண்டு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் 3 வாகனங்கள் பெங்களூரு நோக்கிச் சென்றது. வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று ராணுவ வாகனத்திற்கு இடம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் அரசு பேருந்து நிறுத்தி பேருந்தில் ஏறி தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் தமிழரசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் பேருந்து நிறுத்திவிட்டு, ராணுவ வாகனங்களுக்கு முன்பு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ௧௦௦-க்கும் அதிகமான மக்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனரை அடித்த ராணுவ அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் ராணுவ அதிகாதிகாரிகளை சூழ்ந்துக்கொண்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால், 5-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி எடுத்து பொதுமக்கள் பார்த்து சுட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.