கரூர் :உக்ரைன் ரஷ்யா போர் 6ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள டேனிபுரோ ஸ்டேட் ஆப் யூனிவார்சிட்டியில் மருத்துவம்,பொறியியல் படிப்பு பயிலும் 500 மாணவர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
குறிப்பாக ஹீவ், டேனிபுரோ பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் அருகே ரஷ்யா படைகள் வான்வெளி தாக்குதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் இந்திய தூதரக அலுவலர்கள் கடந்த பிப்.26ஆம் தேதி மேற்கொண்ட முயற்சிகள் திடீரென தொய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த தொடர் முயற்சியின் காரணமாக இந்திய தூதரக அலுவலர்கள் டேனிபுரோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூதரக அலுவலர்கள் கடந்த பிப்.26ஆம் தேதி வழங்கிய அறிவிப்பு படி, உக்ரைன் நாட்டின் எல்லைகளை கடந்து செல்வதற்கு கல்லூரி அடையாள அட்டை, விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
அதன்படி மருத்துவ கல்லூரியில் உள்ள 500 மாணவர்களை பத்திரமாக 20 நபர்களுக்கு வாகனம் என்ற அடிப்படையில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் 20 மணி நேர தொடர் பயணத்திற்கு பிறகு உக்ரைன் எல்லையிலுள்ள அங்கேரி நாட்டின் பகுதியில் உள்ள அங்கேரி புத்தாபிஸ்ட் விமானம் நிலைத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு மீட்கப்படவுள்ளனர்.
இதனையடுத்து தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள 300 மாணவர்கள் நாளை மார்ச் 2ஆம் தேதி மதியத்திற்குள் மீட்கப்பட்டு 500 மாணவர்களும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ள விமானம் மூலம் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
மேலும் இந்தியா வருகை தந்த அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானங்கள் மூலம் தமிழ்நாடு அழைத்துவர தீவிர நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்புக்கு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் 500 மாணவர்கள் பத்திரமாக இந்தியா வர உள்ள நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் 500 மாணவர்களில் உள்ளனர்.
இதுகுறித்து கரூரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஸ்ரீநிதியின் தந்தை ஆண்டனி கேப்ரியல் கூறுகையில், ”உக்ரைன் எல்லையை ஒட்டி தஞ்சமடைந்த இந்திய மாணவர்களை விமானங்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக அழைத்து வந்துள்ளனர். ஆனால் போர் நடைபெற்று வரும் உக்ரைன் நாட்டின் மையப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்திய மற்றும் தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்கான தொடர் முயற்சியில் தற்போது 500 மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது சற்று ஆறுதலாக உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், இன்று கர்நாடகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உக்ரைனில் உணவு வாங்க காத்திருந்த பொழுது குண்டுவெடிப்பில் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அப்பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் இந்திய அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : உக்ரைனில் தவிக்கும் சிவகங்கை மாணவர்களை மீட்டுத்தரக் கோரிக்கை