தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளுக்கு 50ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள் தரும் திட்டம் தொடக்கம்

By

Published : Nov 11, 2022, 6:01 PM IST

கரூர் அரவக்குறிச்சி தடா கோயில் பகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் 50ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

கரூர்: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள அரவக்குறிச்சி அருகேவுள்ள தடா கோயில் பகுதியில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பயிர்மானக்கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக 50ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த 20ஆயிரம் விவசாயிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 'பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால், இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் எதைச்செய்தாலும் அதிலே ஒரு முத்திரையைப் பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதிந்திருக்கக்கூடிய இந்த விழாவில் தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்கிற முறையில் கலந்து கொள்வதிலே நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு அரசினுடைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

இந்த விழாவின் மூலமாக 50ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு வழங்கக்கூடிய வகையில், இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு லட்சம் இணைப்புகளை நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று 50ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச்செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசுதான் செய்து காட்டி இருக்கிறது. ஏன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது, நம்முடைய மாநிலம்தான், தமிழ்நாடு தான் அந்த சாதனையைச்செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று நான் சொன்னேன்.

கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின்

நான் வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட, உணவு உற்பத்தி பெருகிட 50ஆயிரம் கூடுதல் இலவச விவசாய இணைப்புகள் வழங்கப்பட்ட தொடக்க விழா பயனாளிகளுடைய விவரம் என்று ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே அமைச்சரிடத்தில் கேட்டேன், இன்றைக்கு 50ஆயிரம் மின் இணைப்பு என்று விளம்பரப்படுத்தி, விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே அதனுடைய விவரமா என்று கேட்டேன்.

இல்லை, 50ஆயிரம் பேரை இந்தத் திடலுக்குள் அழைத்துவந்து உட்கார வைக்க இடம் இல்லை, அதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, 20ஆயிரம் பேரைத்தான் அழைத்திருக்கிறோம். அந்த 20ஆயிரம் பேரின் பெயர் இந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது, பெயர் மட்டுமல்ல, முகவரி மட்டுமல்ல, அவர்களுடைய செல்பொன் உட்பட முழுமையாக சேகரித்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

எதற்காக இதைச்சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ சொல்லிவிட்டு, பேசிவிட்டு செல்கிறவர்கள் அல்ல, அதைச் செய்து காட்டக்கூடியவர்கள் நம்முடைய அரசு அமைச்சர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:கனமழையினை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

ABOUT THE AUTHOR

...view details