கரூர்: கரூர் அருகே கடவூர் தாலுகா வரவணை கிராமத்தில் உள்ள சுண்டுக்குழிப்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி. பிறவியிலே இரண்டு கைகள் குறைபாடு உடன் பிறந்து, மாற்றுத்திறனாளியாக இருந்தாளும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து வருகிறார் பானுமதி.
பானுமதியைப் போலப் பிறவியிலே மாற்றுத்திறனாளியாகப் பிறந்து, குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டும் அவலநிலை பல்வேறு கிரமங்களில் நிலவும் சூழலில் பானுமதியின் பெற்றோர் மயில் ராவணன்-பழனியம்மாள் தம்பதியினர் கூலி வேலை பார்த்தாலும் தனது மகளை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.
கடந்த 2014 ம் ஆண்டு பானுமதியின் தாய்மாமா இறப்புக்கு வந்த உறவுக்காரனா திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பானுமதியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு பானுமதியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் பானுமதியைத் திருமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ராமசாமி.
இதனை அடுத்து ஓராண்டாகக் கேரளாவில் வசித்து வந்த ராமசாமி-பானுமதி தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகன் பிறந்துள்ளார். இதற்கிடையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமசாமியை பானுமதி கண்டித்தும் கேட்காததால், தனது ஒரு வயது மகன் மணிகண்டனுடன் சுண்டுக்குழிப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நிம்மதியான மணவாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றத்திலிருந்த பானுமதி, தனது மகனுக்காகக் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு தற்போது தனது மகன் மணிகண்டனை அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார். தனது இரு கைகளும் இயல்பாகா இல்லாவிட்டாலும், மனதில் தன்னம்பிக்கையுடன் தனது மகனைப் படிக்கவைத்து அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நோக்கிப் பயணப்படுகிறார் பானுமதி.