தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியாகவும் 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கக்கூடியதுமாகவும் இருந்துவருகிறது கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டி ஏரி. 1837இல் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கடவூர் ஜமீன்தாரின் ஆளுகைக்குள்பட்டிருந்த கடவூர் மலைப்பிரதேசம், திண்டுக்கல் மாவட்டத்தின் வனப் பிரதேசங்களிலிருந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளநீரை சேமித்து வைக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஆயிரத்து 217 ஏக்கர் பரப்பளவு, 44 மீ உயரம் கொண்டிருக்கும் இந்த ஏரிக்கரையின் நீளம் இரண்டாயிரத்து 50, அகலம் 5 மீட்டராகும்.
மழைக் காலங்களில் மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீர் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி, சிந்தாமணிபட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரப்பிய பின் கடைசியாக உபரி நீர் பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும். இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தென்கரை வாய்க்காலில் சென்று திருச்சி மாவட்டத்தின் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
பஞ்சப்பட்டி ஏரி மூலம் போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பக்காபட்டி, வயலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2001 வரை மழைப்பொழிவு இருந்ததால் அப்பகுதி விவசாய நிலங்களில் ஏரியின் நீர் பயன்பாட்டிலிருந்து அப்பகுதியை செழிப்பாக்கியது. 2001-க்கு பிறகு போதிய மழையின்மையால் கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிக்கு மாயனூர் தடுப்பணையிலிருந்து நீர் கொண்டு வர விவசாயிகள் பல முயற்சிகள் எடுத்த போதிலும் ஈடேறவில்லை.
கடலைப் போல கண்ணுக்கு எட்டிய வண்ணம் நீரால் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி இன்று 15 ஆண்டுகளுக்கு மேலாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது ஏரியை முழுவதும் சூழ்ந்துள்ள சீமை கருவேலமரங்கள் நிலத்தடி நீரை முற்றிலுமாக உறிஞ்சி அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏரியில் கரைகளில் அமைந்துள்ள வேம்பு, புங்கை மரங்கள் தண்ணி இல்லாமல் கருகி காணப்படுகிறது.