கரூர் மாவட்டம் கடவூர் கீரனூர் கிராமம் புதுவாடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் (36). அப்பகுதியிலுள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் பயிற்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், முகநூலில் பஜாஜ் நிறுவனத்தின் மூலம் கடன் பெற்றுத் தருவதாக ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதிலுள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
செல்போனில் பேசிய நபர் தன்னை அனுஷ்மன் சாகு என்றும், கடன் பிரிவு மேலாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு லட்ச ரூபாய் தனிநபர் கடன் வழங்குவதற்கு பராமரிப்பு கட்டணமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி அவரின் வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்திய குமார், தொடர்ந்து கூகுள் பே மூலம் ரூபாய் 43 ஆயிரம் வரை அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் தொகை வழங்கப்படாததால் சந்தேகமடைந்த குமார், பஜாஜ் தனிநபர் கடன் பிரிவிற்குத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அப்போது மேற்கூறிய நபர் கடன் பிரிவில் பணியாற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமார், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.