கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’கரூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க 24 மணி நேர தேர்தல் கண்காணிப்பு படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொள்ளலாம்; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் செல்லும்போது அனைத்து வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பாதுகாப்பாக வாக்களிக்க வருமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம். கரூர் மாவட்ட மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் புகார்கள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் தேசிய கட்டுப்பாட்டு புகார் மையத்தில் 980 புகார்கள் பெறப்பட்டுள்ளன.